2013-12-16 16:05:11

'Villa Nazareth' என்ற அமைப்பைச் சார்ந்தவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துக்கள்


டிச.16,2013. திருஅவையின் பிறரன்புப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ள 'Villa Nazareth' என்ற அமைப்பைச் சார்ந்தவர்களுக்குத் தன் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களுக்கு திருப்பீடச் செயலாராகப் பணியாற்றிய கர்தினால் Domenico Tardini அவர்களால் உருவாக்கப்பட்ட 'Villa Nazareth' என்ற பிறரன்பு அமைப்பின் உறுப்பினர்களை இஞ்ஞாயிறு மதியம் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினர் ஆற்றிவரும் பணிகளுக்குத் தன் பாராட்டைத் தெரிவித்தார்.
கர்தினால் Tardini அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் வழியாக, அறிவுத் திறன் மிக்க ஏழை மாணவர்களின் கல்விக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
பேராயராக இருந்த Tardini அவர்கள், 1958ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி கர்தினாலாகவும், திருப்பீடச் செயலாராகவும் உயர்த்தப்பட்ட நாளின் நினைவைக் கொண்டாட 'Villa Nazareth' அமைப்பினர், இஞ்ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலியில் கலந்துகொண்டனர். இத்திருப்பலிக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினரைச் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.