திருத்தந்தை பிரான்சிஸ் : நமது எதிர்காலம் கடவுளின் கரங்களில் உள்ளது என்பதே கிறிஸ்தவ
நம்பிக்கை
டிச.14,2013. நமது எதிர்காலம் கடவுளின் கரங்களில் உள்ளது என்பதே கிறிஸ்தவ நம்பிக்கை என்று
இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்னும்,
கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை ஏற்ற கடந்த பத்து மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் பத்து முக்கிய சொற்றொடர்கள் உலகை மாற்றியுள்ளன என, ஓர் ஊடகம் கணித்துள்ளது. திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த மார்ச் 13ம் தேதி இரவில்,
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம், உரோம் ஆயர்
தம் மக்களை ஆசீர்வதிப்பதற்கு முன்னர், மக்களாகிய நீங்கள் எனக்காகச் செபியுங்கள் என திருத்தந்தை
கேட்டுக்கொண்டது தொடங்கி பத்து நிகழ்வுகளில் அவர் கூறியதைக் குறிப்பிட்டுள்ளது Romereports
என்ற அந்த செய்தி நிறுவனம். அஞ்சாதீர்கள், நம் ஆண்டவர் ஆறுதலின் ஆண்டவர், கனிவன்பின்
ஆண்டவர். அவர் நம்மைப் புரிந்துகொள்கிறார், நாம் மனம்வருந்தி, திறந்த மனத்துடன் உண்மையிலேயே
அவரிடம் சென்றால் அவர் மன்னிப்பதில் சோர்வடையாதவர் போன்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
கூற்றுக்களைச் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.