Evangelii Gaudium, கொரியாவில் ஏழ்மையை ஒழிப்பதற்கு ஒரு கருவியாக உள்ளது, செயோல் பேராயர்
டிச.14,2013. Evangelii Gaudium என்ற தனது முதல் திருத்தூது அறிவுரையில் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் முன்வைத்திருக்கும் சவால்கள் கத்தோலிக்கருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த
கொரிய சமுதாயத்துக்கும் உரியதாய் உள்ளன என, தென் கொரியத் தலைநகர் செயோல் பேராயர் Andrew
Yeom Soo-jung கூறினார். இந்தத் திருத்தூது அறிவுரையில் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ள
அமைப்புமுறை பிரச்சனைகள், தென் கொரிய சமுதாயம் முழுவதிலும் காணப்படுகின்றன எனவும், இப்பிரச்சனைகள்
குறித்து அந்நாட்டில் தற்போது விவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் ஆசியச் செய்தி நிறுவனத்திடம்
தெரிவித்தார் பேராயர் Yeom. திருத்தந்தையின் இந்த அறிவுரை, கொரியாவில் ஏழ்மையை ஒழிப்பதற்கு
ஒரு கருவியாக இருப்பதாகக் கூறியுள்ள செயோல் பேராயர், கிறிஸ்தவர்கள், இந்த அறிவுரையை நன்றாக
வாசித்து, அதனை, தங்களின் நற்செய்தி அறிவிப்புப்பணியில் செயல்படுத்துமாறும் கேட்டுள்ளார். நற்செய்தியின்
மகிழ்ச்சி என்ற திருத்தந்தையின் இந்த அறிவுரை, கொரிய மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும்
மகிழ்வையும் அளிப்பதாக அமைந்துள்ளது எனவும் பேராயர் Yeom கூறியுள்ளார்.