2013-12-13 15:35:28

திருத்தந்தை பிரான்சிஸ் : ஒப்புரவு திருவருள்சாதனத்துக்குச் செல்ல அஞ்ச வேண்டாம்


டிச.13,2013. ஒப்புரவு திருவருள்சாதனத்துக்குச் செல்ல அஞ்ச வேண்டாம், அத்திருவருள்சாதனத்தில் உங்களை மன்னிக்கும் இயேசுவைச் சந்திக்கிறீர்கள் என, இவ்வெள்ளிக்கிழமையன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு சபையில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டதன் 44ம் ஆண்டை(1969, டிசம்பர் 13) டிசம்பர் 13, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், ஒப்புரவு திருவருள்சாதனத்தின் பலனை தனது டுவிட்டரில் ஒன்பது மொழிகளில் எழுதியுள்ளார்.
இன்னும், மலேசியாவின் கோலாலம்பூர் பேராயர் மர்ஃபி நிக்கோலாஸ் சேவியர் பாக்யம் அவர்களின் பணி ஓய்வை இவ்வெள்ளியன்று ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1938ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பிறந்த பேராயர் மர்ஃபி பாக்யம், 2003ம் ஆண்டு மே 24ம் தேதி, திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் கோலாலம்பூர் பேராயராக நியமனம் செய்யப்பட்டார்.
இசுலாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் பொதுச் செயலர் Ekmeleddin Ihsanoglu அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.