கிறிஸ்தவப் போராட்டதாரர்கள் அடிக்கப்பட்டதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கோரியுள்ளார்
டிச.13,2013. இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் கிடைக்கவேண்டிய
உரிமைகளைக் கோரி புதுடில்லியில் இப்புதனன்று அமைதியான முறையில் ஊர்வலத்தை மேற்கொண்டவர்கள்மீது
காவல்துறை நடத்திய அத்துமீறிய செயலுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். இந்தியாவில்
தலித் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் எதிராக இடம்பெறும் பாகுபாடுகள் நிறுத்தப்பட
வேண்டுமென்பதை வலியுறுத்தி இவ்வியாழனன்று தன்னைச் சந்தித்த தலத்திருஅவை அதிகாரிகளிடம்
மன்னிப்புக் கேட்டார் பிரதமர் மன்மோகன் சிங். டில்லி பேராயர் Anil Couto அவர்கள் தலைமையில்
12 பேர் அடங்கிய குழு பிரதமரைச் சந்தித்தது. இப்புதனன்று நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தின்போது
கைது செய்யப்பட்ட டில்லி பேராயர் Anil Couto அவர்களும், இன்னும் பிற கிறிஸ்தவத் தலைவர்களும்
பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், அமைதியான ஓர் ஊர்வலத்தில் அத்துமீறிய வன்முறையைப்
பயன்படுத்தியது வெட்கத்திற்குரியது என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்ட்
கிரேசியஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே,
கைது செய்யப்பட்ட இந்நிகழ்வைக் குறித்து காவல்துறைமீது வழக்கு பதிவு செய்ய டில்லி உயர்மறைமாவட்டம்
முயன்று வருவதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.