இந்தியாவில் வாழும் ஏழைகள் மனித உரிமைகள் இழந்து தவிப்பதை ஒவ்வொரு நாளும் காண முடிகிறது
- இந்திய ஆயர் பேரவை
டிச.11,2013. இந்தியாவில் வாழும் ஏழைகளும், நலிவுற்ற இனத்தவரும் மனித உரிமைகள் இழந்து
தவிப்பதை ஒவ்வொரு நாளும் காண முடிகிறது என்று இந்திய ஆயர் பேரவை கூறியுள்ளது. டிசம்பர்
10 இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் நாளையொட்டி, Fides செய்திக்கு
அளித்த குறிப்பொன்றில், இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, முன்னேற்றப் பணிக்குழுவின்
செயலர் அருள்பணி சார்ல்ஸ் இருதயம் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். போபால் விபத்து,
குஜராத், ஒடிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற வன்முறைகள் ஆகியவற்றில் குற்றம் புரிந்தவர்கள்
எவ்வித தண்டனையும் பெறாமல் இருப்பது, மனித உரிமைகளுக்கு இந்திய அரசு அளிக்கும் அவலமான
நிலையைச் சுட்டிக்காட்டுகிறது என்று அருள்பணி இருதயம் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வெளியிட்ட Evangelii Gaudium என்ற திருத்தூது அறிவுரையில்
கூறப்பட்டுள்ள கருத்துக்களை இந்திய கத்தோலிக்கத் திருஅவை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதையும்
அருள்பணி இருதயம் அவர்கள் தன் செய்தியில் வெளியிட்டுள்ளார்.