2013-12-10 14:46:57

உலகில் பசியைப் போக்குவதற்கு மக்கள் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு


டிச.10,2013. உணவுப்பொருள்களை வீணாக்குவதையும், உலகின் வளங்களைப் பொறுப்பற்றுப் பயன்படுத்துவதையும் கைவிட்டு, பசி எனும் இழிவைப் போக்குவதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகில் பசியை அகற்றுவதற்கு உலகளாவிய நடவடிக்கையையும் செபத்தையும் இச்செவ்வாய் பகல் 12 மணிக்கு அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் சாமோவா தீவில் தொடங்கியுள்ளதையொட்டி ஒலி-ஒளிச் செய்தி வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், “ஒரே மனிதக் குடும்பம், அனைவருக்கும் உணவு” என்ற இந்த முயற்சிக்குத் தனது ஆசீரையும் வழங்கியுள்ளார்.
ஒவ்வொருவருக்கும் உணவளிக்கப் போதுமான உணவு உலகில் இருக்கின்றது என்றும் கூறிய திருத்தந்தை, போதுமான உணவைப் பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் கடவுள் அளித்துள்ள உரிமைகள் உள்ளன என்பதை மதிப்பதற்கு மனது இருந்தால் மட்டுமே உலகில் பசியை அகற்ற முடியும் என்று கூறியுள்ளார்.
இன்று உலகில் ஏறக்குறைய நூறு கோடிப் பேர் பசியால் துன்புறுகின்றனர் என்றும், இப்படி ஒருநிலை காணப்படவில்லை என்பதுபோல் நாம் பாசாங்குடன் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், பசியால் துன்புறும் அனைவருக்காகவும் ஒரே குடும்பமாக இணைந்து குரல் கொடுப்போம் எனக் கேட்டுள்ளார்.
அனைவருக்கும் உணவு கிடைப்பதற்கான உரிமை, அனைத்துலக மனித உரிமைகள் அறிவிப்பில் ஒன்றாக இருக்கும்வேளை, “அனைவருக்கும் உணவு” என்ற இம்முயற்சி, அனைத்துலக மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10, இச்செவ்வாயன்று தொடங்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.