மலாலா உட்பட ஆறு பேருக்கு ஐ.நா. மனித உரிமைகள் விருது
டிச.06,2013. புகழ்பெற்ற பாகிஸ்தான் மாணவி ஆர்வலர் யூசாப்சாய் மலாலா, அடிமைத்தனத்துக்கு
எதிராகப் போராடும் மௌரித்தானியா நாட்டின் ஆர்வலர் உட்பட ஆறு பேருக்கு, ஐ.நா.வின் 2013ம்
ஆண்டுக்கான மனித உரிமைகள் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில்
சிறுமிகளின் கல்விக்காகக் குரல் கொடுத்ததற்காகத் தலிபான்களால் சுடப்பட்டவர் மலாலா. மௌரித்தானியாவின்
Biram Dah Abeid, விடுதலையடைந்த அடிமைகளின் மகன். இவர், அந்நாட்டில் அடிமைத்தனத்துக்கு
எதிராகப் போராடி வருகிறார். இன்னும், கொசோவோ, ஃபின்லாந்து, மொரோக்கோ, மெக்சிகோ ஆகிய நாட்டைச்
சார்ந்தவர்களும் இவ்விருதைப் பெறுகின்றனர். மனித உரிமைகளை மேம்படுத்துவதில் சிறப்பான
பணியாற்றிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பாராட்டும் விதமாகவும், மனித உரிமைகளுக்காக
உலகெங்கும் உழைப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை இவ்விருது வழங்கப்படுகிறது. மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம்தேதி நியுயார்க்
ஐ.நா. தலைமையகத்தில் இவ்விருது வழங்கப்படுகிறது. ஐ.நா. மனித உரிமைகள் உயர் அலுவலகர் அலுவலகம்
திறக்கப்பட்டதன் 20ம் ஆண்டு நிறைவு இவ்வாண்டு டிசம்பர் 10ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.