திருத்தந்தை பிரான்சிஸ்: கிறிஸ்துவில் வேரூன்றியிருந்தால் எத்தகைய தாக்குதலையும் நம்மால்
எதிர்கொள்ள முடியும்
டிச.05,2013. நாம் கிறிஸ்துவில் வேரூன்றியிருந்தால் எத்தகைய தாக்குதலையும் நம்மால் எதிர்கொள்ள
முடியும் என இவ்வியாழன் காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய
திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வியாழன் நற்செய்தி வாசகம் தந்த,
பாறையின்மீது கட்டப்பட்ட வீடு குறித்த உவமை பற்றித் தனது மறையுரையில் விளக்கிய திருத்தந்தை
பிரான்சிஸ், கிறிஸ்துவில் தன் ஆதாரத்தைக் கொண்டிராத கிறிஸ்தவ வார்த்தை ஏமாற்றத்தைத் தருவதோடு,
காயப்படுத்தவும் செய்யும் மற்றும் பிரிவினைக்கும் காரணமாகும் என உரைத்தார். நல்வார்த்தைகள்
வாழ்வில் செயல்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் அவை காயப்படுத்திவிடும் என்ற திருத்தந்தை,
கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவ வார்த்தைகள் அறிவற்ற பாதைக்கு இட்டுச்செல்பவை என்றும் கூறினார். கிறிஸ்துவைப்
புறக்கணிக்கும் கிறிஸ்தவ வார்த்தை பகட்டுத்தன்மைக்கு இட்டுச்செல்வதோடு அத்தகையோரை கடவுள்
கீழிறக்குவார், இதையே தொடர்ந்து மீட்பு வரலாற்றில் காண்கிறோம் எனவும் தெரிவித்த திருத்தந்தை,
இயேசு இல்லாத, அவருடன் உறவு இல்லாத, அவரோடு இணைந்த செபம் இல்லாத, இயேசுவுக்கான சேவை இல்லாத
கிறிஸ்தவ வார்த்தை பயனற்றது எனவும் இத்திருப்பலியில் மறையுரையில் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.