சிரியாவில் கடத்தப்பட்டுள்ள 12 ஆர்த்தடாக்ஸ் அருள்சகோதரிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை,
பேராயர் செனாரி
டிச.03,2013. சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் இத்திங்கள் மாலையில் கடத்தப்பட்ட
12 ஆர்த்தடாக்ஸ் அருள்சகோதரிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை என, தமாஸ்கிலுள்ள திருப்பீடத்தூதர்
பேராயர் மாரியோ செனாரி கூறினார். Maaloulaவிலுள்ள புனித தேக்ளா துறவு இல்லத்திலிருந்து
12 ஆர்த்தடாக்ஸ் அருள்சகோதரிகள் Yabrud நகர் நோக்கி இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்திச்
செல்லப்பட்டனர் என்றும், இச்சகோதரிகள் குறித்த தகவல்கள் இதுவரை எதுவும் தெரியவில்லை எனவும்
பேராயர் செனாரி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். Maaloula நகரில், சிரியா
இராணுவத்துக்கும், இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த இரண்டு நாள்களாக கடும்
சண்டை இடம்பெற்று வருகிறது. இதற்கிடையே, சிரியா அரசுத்தலைவர் Bashar al-Assadன் அங்கீகாரத்தாலும்
அந்நாட்டில் போர்க்காலக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என, ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர்
நவிபிள்ளை இத்திங்களன்று குறைகூறியுள்ளார்.