திருத்தந்தை பிரான்சிஸ்: செபம் மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளுடன் கிறிஸ்து பிறப்பு விழாவுக்காகத்
தயாரிப்போம்
டிச.02,2013. 'கிறிஸ்து பிறப்பு விழா என்பது நாம் நினைப்பதைவிட மேலானது, ஏனெனில், இது
கிறிஸ்துவை நோக்கிய பாதை; அவரைச் சந்திக்கச்செல்லும் பாதை,' என இத்திங்கள் காலை வத்திக்கான்
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார்
திருத்தந்தை பிரான்சிஸ். நம் முழு இதயத்தோடும், வாழ்வோடும், விசுவாசத்தோடும் இக்காலங்களில்
இறைவனைச் சந்திப்போம் என எடுத்துரைத்த திருத்தந்தை, இத்திங்களின் திருப்பலி வாசகத்தில்,
நூற்றுவர் படைத்தலைவன் இயேசுவைச் சந்தித்து தன் விசுவாசத்தை வெளிப்படுத்திய நிகழ்வைச்
சுட்டிக்காட்டி, இத்தகைய விசுவாசத்துடன் நாமும் இறைவனைச் சந்திக்கும்போது முழுமையான மகிழ்வு
நமக்குக் கிட்டுகிறது என்றார். இறைவன் வரவுள்ளார் என திருவருகைக் காலத்தில் கூறுவது,
அவர் நம் இதயத்தில், ஆன்மாவில், வாழ்வில், நம்பிக்கையில், பயணத்தில் மீண்டும் நுழைய வருகிறார்
என்பதையே குறிப்பிடுகின்றது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். கடவுள் நம் ஒவ்வொருவரையும்
தனித்தனியாகச் சந்தித்து, நம்மை உற்றுநோக்குகிறார் என்பதை உணர்ந்து, அவர் நம்மை அன்புகூர்வதுபோல்
நாமும் நம் இதயத்தை அவருக்கென திறந்து அன்புகூரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை
பிரான்சிஸ், கிறிஸ்து பிறப்பு விழாவுக்காக, செபம் மற்றும் பிறரன்பு நடவடிக்கைகள் மூலம்
நம்மைத் தயாரிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.