2013-11-29 15:03:34

திருத்தந்தை பிரான்சிஸ்: அறிவு ஒரு கொடை, கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு ஏற்றவிதத்தில் சிந்திக்கின்றனர்


நவ.29,2013. கிறிஸ்துவைப் பின்செல்லுகிறவர், அறிவைமட்டும் பயன்படுத்தாமல், தனது இதயத்தையும், தனக்குள் இருக்கும் ஆவியையும் பயன்படுத்திச் சிந்திக்கின்றனர், இவ்வாறு சிந்திக்காவிடில், வரலாற்றில் கடவுளின் பாதையை அவரால் புரிந்துகொள்ள இயலாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய சிறிய மறையுரையில் கிறிஸ்தவராகச் சிந்திப்பதை மையப்படுத்தி சிந்தனைகளை வழங்கினார்.
கிறிஸ்தவர்கள், இந்த உலகு விரும்பும் வலுவற்ற, ஒரே மாதிரியான எண்ணங்களைப் பின்பற்றாமல், கடவுளின் மக்கள் என்ற முறையில் சுதந்திரமான எண்ணங்களைக் கொண்டவர்களாய் இருக்கின்றனர், கடவுளுக்கு ஏற்றவிதத்தில் அவர்கள் சிந்திக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
கடவுள் இத்தகையவராய் இருக்கவேண்டுமென்பதைப் புரிந்துகொள்ளாமல் இருந்த எம்மாவுஸ் சீடர்களோடு பேசியபோது, இயேசு அவர்களை, அறிவிலிகளே, மந்த உள்ளத்தினரே என்று அழைத்தார் என்றும், தாம் கூறியவைகளைச் சீடர்கள் புரிந்துகொள்ளாமல் இருந்தபோது இயேசு அவர்கள்மீது கோபப்படவில்லை, ஆனால், அவ்வாறு இருப்பதாகத் தன்னைக் காட்டிக்கொண்டார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
நமது வாழ்வில், நமது இதயத்தில், உலகில், வரலாற்றில், இந்த நொடிப்பொழுதில் என்ன நடக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டுமென்று இயேசு விரும்புகிறார், இவையெல்லாம் காலத்தின் அறிகுறிகள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நடப்பது என்ன என்பதை புரிந்துகொள்வதற்கு நாம் சுதந்திரமாகச் சிந்திப்பவர்களாக இருக்குமாறு இயேசு அழைக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இதற்கு நம் ஆண்டவரின் உதவி நமக்குத் தேவை என்பதால் அவரிடம் அருள் வேண்டுவோம் எனவும், காலத்தின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான அறிவென்னும் கொடையை தூய ஆவி தருகிறார் என்றும் இத்திருப்பலியில் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.