ஈராக், சிரியா கிறிஸ்தவர்களுக்காக முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தினமும் செபம்
நவ.29,2013. ஈராக், சிரியா மற்றும் கீழை நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களுக்காகத் தான் தினமும்
செபிப்பதாக முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தெரிவித்ததாக, கல்தேய வழிபாட்டுமுறையின்
முதுபெரும் தலைவரும், பாக்தாத் பேராயருமான இரபேல் லூயிஸ் சாக்கோ கூறினார். வத்திக்கானில்
கீழை வழிபாட்டுமுறை பேராயம் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கீழை வழிபாட்டுமுறைகளின்
முதுபெரும் தலைவர்களும் பேராயர்களும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தது
குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய முதுபெரும் தலைவர் சாக்கோ இவ்வாறு தெரிவித்தார். மத்திய
கிழக்கு மற்றும் கீழை நாடுகளின் கிறிஸ்தவர்கள் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள்
அக்கறையோடு விசாரித்ததாகவும், அக்கிறிஸ்தவர்களுக்காகத் தான் தினமும் செபிப்பதாகவும் கூறியதாகத்
தெரிவித்தார் முதுபெரும் தலைவர் சாக்கோ. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈராக்
நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு தான் அழைத்ததாகவும் கூறினார் முதுபெரும் தலைவர்
சாக்கோ.