பிற சமயத்தவருடன் நன்மதிப்பையும் நட்பையும் ஊக்குவிக்க திருத்தந்தை அழைப்பு
நவ.28,2013. உலகின் வருங்காலம் பன்மைத்தன்மையை மதித்து ஒன்றிணைந்து வாழ்வதில் அடங்கியுள்ளது
என்பதால், சமய சுதந்திரம் அடிப்படை உரிமை என்பதை, அதன் அனைத்துக் கூறுகளோடும் ஏற்பது
இன்றியமையாதது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வியாழனன்று நிறைவடைந்த திருப்பீட
பல்சமய உரையாடல் அவையின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட 50 பிரதிநிதிகளை இவ்வியாழனன்று
திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், உலகில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு
சமய சுதந்திரம் இன்றியமையாதது என்பதால், திருஅவை அண்மைக் காலமாக இதற்காகத் தன்னை அர்ப்பணித்து
வருகிறது என்றும் குறிப்பிட்டார். “சமுதாயத்தில் பல்வேறு மரபுகளைக்கொண்ட மதங்களின்
உறுப்பினர்கள்” என்ற தலைப்பில் இவ்வவை நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு ஆற்றிய
உரையில், குடிபெயர்வுகள் அதிகம் அதிகமாகஇடம்பெற்றுவரும் இந்நாள்களில், பல்வேறு கலாச்சாரங்கள்,
மதங்கள் மற்றும் பாரம்பரியங்களுக்குத் தன்னைத் திறந்ததாகச் செயல்படவேண்டியசவாலை கத்தோலிக்கத்
திருஅவை எதிர்நோக்குகின்றது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். மக்கள் ஒன்றிணைந்து
வாழ்வதற்குப் பலவேளைகளில் அச்சம் தடையாகஇருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியதிருத்தந்தை,
அச்சத்தை மேற்கொள்வதற்கு பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவேண்டியது அவசியம் என்றார்.