நாட்டு நலனுக்காகஇந்தியக் கிறிஸ்தவர்கள் சிறப்புச் செபம்
நவ.,28, 2013. பாவங்களுக்கு மனம் வருந்தும் நோக்கிலும், நாட்டின் நலனுக்காகவும் வரும்
சனிக்கிழமையன்று இந்தியாவின் ஆயிரம் இடங்களில் செபக்கூட்டங்கள் இடம்பெறும் என தலத்திருஅவை
அறிவித்துள்ளது. அனைத்து மக்களுக்காகவும், குறிப்பாக அதிகாரத்திலிருப்போருக்காகச்
செபிக்கவேண்டும் எனற விவிலியப் போதனைகளுக்கு இயைந்தவகையில், இந்தியாவில் ஒன்றிணைந்த கிறிஸ்தவ
செபவழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுநலனுக்கான
சேவை, கல்வி, நலஆதரவு, ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவைகளில் பங்களிப்பு மூலம்
நாட்டுநலனுக்கான தங்கள் அன்பை வெளிப்படுத்திவரும் கிறிஸ்தவ சமூகம், இம்மாதம் 30ம் தேதி
நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் நாட்டு நலனுக்கான கூட்டுச் செபத்தை மேற்கொள்ளும் என
டில்லி உயர்மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. நாடு வளர்ச்சி கண்டுவரும் அதேவேளை,
அரசியலில் ஊழல், கௌரவக்கொலைகள், சாதிகளிடையே மற்றும் மதங்களிடையே மோதல்கள் போன்றவையும்
அதிகரித்து வருவது குறித்த கவலையை வெளியிட்டுள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், நல்லவைகளைக் காத்துக்கொள்ள
இறைவனின் தலையீட்டை வேண்டி சிறப்பு செபவழிபாட்டை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.