Rett syndrome நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திருத்தந்தை
நவ.27,2013. Rett syndrome என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 50 குழந்தைகள், அவர்களின்
பெற்றோர் என 170 பேரை திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் இப்புதன் பொதுமறைபோதகத்திற்கு
முன்னர் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். Rett syndrome என்ற உடல் ஆற்றல்கள்
மற்றும் மூளை வளர்ச்சிக்குறைவு நோயால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைகளைச் சந்தித்த திருத்தந்தை,
இக்குழந்தைகளுக்கு தனிப்பட்ட ஆசீரையும், அவர்களின் பெற்றோருக்கு ஊக்க வார்த்தைகளையும்
வழங்கினார். ஏற்கனவே கடந்த மாதம் 4ம் தேதி அசிசி நகரிலும், இவ்வாண்டு மேமாதம் 31ம்
தேதி தான் தங்கியிருக்கும் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்திலும் Rett
syndrome நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைச் சந்தித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1966ம் ஆண்டில்தான் Rett syndrome நோய் குறித்த முழுவிவரங்கள் Andreas Rett என்பவரால்
வெளி உலகுக்குத் தெரியவந்தன. இவர் பெயராலேயே அழைக்கப்படும் இந்நோய், பெரும்பாலும் பெண்குழந்தைகளையே,
அதுவும் அவைகள் பிறந்த சில மாதங்களுக்குப்பின் தாக்கத் தொடங்குகிறது.