2013-11-25 15:51:52

மகளிருக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாள்,நவம்பர் 25


கடவுள், தாய்நாடு, சுதந்திரம் ஆகிய விருதுவாக்கைக் கொண்டுள்ள நாடு தொமினிக்கன் குடியரசு. கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான தொமினிக்கன் குடியரசு நாட்டில், Patria Mercedes Mirabal, María Argentina Minerva Mirabal, Antonia María Teresa Mirabal ஆகிய மூன்று சகோதரிகளும், அந்நாட்டின் அரசுத்தலைவர் இரஃபேல் துருகில்லோ என்பவரின் சர்வாதிகார ஆட்சி(1930-1961) முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார்கள். இதனால், இந்த மூன்று சகோதரிகளும் துருகில்லோவின் ஆணையின்பேரில் 1960ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி குரூரமாய்ச் சுட்டுக்கொல்லப்பட்டனர். Mirabal சகோதரிகள் என அழைக்கப்படும் இம்மூவரும் கொலைசெய்யப்பட்ட நவம்பர் 25ம் தேதியை வன்முறை ஒழிப்பு நாளாக, 1981ம் ஆண்டிலிருந்து கடைப்பிடித்து வருகின்றனர் பெண்ணுரிமை ஆர்வலர்கள். 1999ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதியன்று கூடிய ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, அனைத்துலக மகளிருக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாள் நவம்பர் 25ம் தேதியென அறிவித்தது. இதன்படி, இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து, ஆண்டுதோறும் நவம்பர் 25ம் நாளன்று அனைத்துலக மகளிருக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாள் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மகளிருக்கெதிரான வன்முறை, மனித உரிமை மீறலாகும். சட்டத்திலும் நடைமுறையிலும் பெண்கள் பாகுபாடுகளை எதிர்நோக்குவதால் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. ஏழ்மை ஒழிப்பு, எய்ட்ஸ்நோய் ஒழிப்பு, அமைதியையும் பாதுகாப்பையும் உருவாக்குதல் போன்றவற்றுக்கு மகளிருக்கெதிரான வன்முறை தடையாய் இருக்கின்றன. மகளிருக்கெதிரான வன்முறை, உலகில் பரவலாக ஒரு தொற்றுநோயாக இருக்கின்றது. இவ்வாறு இவ்வுலக நாளை உருவாக்கியபோது ஐ.நா. கூறியது. உலகில் 70 விழுக்காட்டுப் பெண்கள் தங்கள் வாழ்நாளில் வன்முறையை எதிர்நோக்குகின்றனர். பாலியல் தொழில், கட்டாய வேலை, அடிமைத்தனம் உட்பட பல செயல்களுக்காக. ஒவ்வோர் ஆண்டும் 5 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை வியாபாரம் செய்யப்படுவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் சிறுமிகள். அமெரிக்க ஐக்கிய நாட்டில், மகளிர் எதிர்கொள்ளும் வன்முறை ஆண்டுக்கு 580 கோடி டாலருக்கு அதிகமாக இழப்பை ஏற்படுத்துகின்றது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : இணையத்திலிருந்து







All the contents on this site are copyrighted ©.