2013-11-25 16:01:25

நம்பிக்கை ஆண்டுக்கென உழைத்த அனைத்துத் தன்னார்வப் பணியாளர்க்குத் திருத்தந்தை நன்றி


நவ.25,2013. விசுவாசிகளாகிய நமக்கு, திருமுழுக்கு நாளில் கொடுக்கப்பட்ட விசுவாசச் சுடரை மீண்டும் ஒளிர்விக்கச் செய்வதற்கு நம்பிக்கை ஆண்டு, இறைவனால் வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று நிறைவடைந்த நம்பிக்கை ஆண்டின் பல்வேறு நிகழ்வுகளுக்கென உழைத்த தன்னார்வப் பணியாளர்களை இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, இந்த அருளின் காலத்தில், கிறிஸ்தவத்தின் சாரமாகிய, பிறரன்போடு நிறைந்த விசுவாசத்தை மீண்டும் நம்மால் கண்டுணர முடிந்தது என்றும் தெரிவித்தார்.
நம் அன்றாட வாழ்வில் நாம் தெரிவு செய்பவைகளையும், நம் செயல்களையும் விசுவாசம் தூண்டுவதால் இது உண்மையிலேயே கிறிஸ்தவ அனுபவத்தின் மூலைக்கல்லாய் இருக்கின்றது எனவும் திருத்தந்தை கூறினார்.
இந்த நம்பிக்கை ஆண்டில் இந்தத் தன்னார்வப் பணியாளர்கள் பெற்றுள்ள அனுபவம், முதலில் அவர்கள் தங்களையே திறந்த மனம் கொண்டவர்களாய் அமைக்கவும், பிறரை, குறிப்பாக, தங்கள் வாழ்வில் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் தளர்ச்சி கண்டுள்ளவர்களைச் சந்திக்கவும் உதவுவதாய் உள்ளது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.