2013-11-23 15:51:24

நம்பிக்கை ஆண்டு நிறைவு திருப்பலி


நவ.23,2013. 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தொடங்கிய நம்பிக்கை ஆண்டை, 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவான இஞ்ஞாயிறன்று நிறைவுக்குக் கொண்டு வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நம்பிக்கை ஆண்டின் நிறைவுத் திருப்பலியை, ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது முதல் "மறைத்தூது அறிவுரை" ஏட்டை வெளியிடுவார்.
"Evangelii Gaudium" அதாவது "நற்செய்தியின் மகிழ்ச்சி" என்ற தலைப்பிலான இவ்வேட்டை அடையாளப்பூர்வமாக 36 பேருக்கு வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
லாத்விய நாட்டு ஓர் ஆயர், டான்சானிய நாட்டு ஓர் அருள்பணியாளர், ஆஸ்திரேலிய நாட்டு ஒரு தியாக்கோன், இன்னும், ஒரு குடும்பத்தினர், இருபால் துறவியர், வேதியர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர் இளையோர், முதியோர், நோயாளிகள் என 5 கண்டங்களின் 18 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் மறைத்தூது அறிவுரை இம்மாதம் 26ம் தேதி செவ்வாயன்று திருப்பீட நிருபர் கூட்டத்தில் வெளியிடப்படும்.
மேலும், இத்திருப்பலியில் எடுக்கப்படும் நிதி, பிலிப்பீன்சில் ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்க்கென அனுப்பப்படும் என திருப்பீடம் அறிவித்துள்ளது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.