2013-11-23 15:57:38

கிறிஸ்து அரசர் பெருவிழா : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் பணி புரிந்த சென்னை லொயோலா கல்லூரியின் மையத்தில் அமைந்துள்ள ஓர் அழகான கோவில் கிறிஸ்து அரசர் ஆலயம். அந்த ஆலயத்தில் பீடத்திற்கு மேல் நிறுவப்பட்டுள்ள கிறிஸ்து அரசரின் திருஉருவம் பிரம்மாண்டமாக இருக்கும். அரசருக்குரிய ஓர் ஆடம்பரமான உடையுடன், தன் இரு கைகளையும் விரித்தபடியே கிறிஸ்து நிற்கும் உருவம் அது. அதே கோவிலில் பீடத்தின் இடது பக்கம் சிலுவையில் இரு கைகளையும் விரித்தபடி தொங்கும் இயேசுவின் உருவமும் வைக்கப்பட்டுள்ளது. சிலுவையில் தொங்கும் இயேசுவின் உருவம் தரைமட்டத்தில் வைக்கப்பட்டிருப்பதால், பலர் அந்த உருவத்தின் கால்களைத் தொட்டபடி, கண்களை மூடி நின்று செபிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், பீடத்தின் மேல், உயரத்தில் உள்ள பிரம்மாண்டமான கிறிஸ்து அரசரின் திருஉருவத்தை அவ்வளவு எளிதில் யாரும் தொட்டுவிட முடியாது. அத்திருஉருவத்தைத் துடைத்து சுத்தம் செய்ய, ஏணி போட்டு ஏறி முயற்சிகள் செய்ய வேண்டும்.
நான் அந்தக் கல்லூரியில் பணி செய்தபோது மனதில் தோன்றாத ஓர் எண்ணம் இப்போது எழுகிறது. கிறிஸ்து அரசரின் உருவம் எட்டாத தூரத்தில் இருப்பதும், சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவின் உருவம் மக்களின் கரங்கள் பட்டுத் தேய்ந்திருப்பதும் நமக்கு ஏதாவது பாடங்களைச் சொல்கிறதோ என்று நினைத்துப் பார்க்கிறேன்.
இயேசுவை இந்தக் கோவிலுக்கு அழைத்துச் சென்று, கிறிஸ்து அரசர் உருவம், சிலுவையில் தொங்கும் உருவம் இரண்டையும் காட்டி, இவ்விரு உருவங்களில் அவருக்கு மிகவும் பிடித்த உருவம், அல்லது அவரது அரசத் தன்மையைக் காட்டும் உருவம் எது என்று கேட்டால், அவர் என்ன பதில் சொல்வார் என்றறிய எனக்கு சிறிது ஆர்வம். இதற்குரிய பதிலை இயேசு நேரடியாகக் கூறாமல், இன்றைய நற்செய்தியை வாசித்துப் பாருங்கள் என்று அவர் கூறலாம்.
இன்றைய நற்செய்தி மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கான நற்செய்தியை வாசிக்கும்போது, இவ்விழாவின் மையப் பொருளை, ‘கிறிஸ்து அரசர்’ என்ற பட்டத்தின் பொருளை அறிந்துகொள்ள முடியும். இன்றைய நற்செய்தியில் (லூக்கா 23: 35-43) தரப்பட்டுள்ளது கல்வாரி காட்சி. சென்ற ஆண்டு இவ்விழாவுக்குத் தரப்பட்ட வாசகம் பிலாத்து இயேசுவைச் சந்தித்தக் காட்சி. (யோவான் 18: 33-37) அடுத்த ஆண்டு இவ்விழாவுக்குத் தரப்பட்டுள்ள வாசகம் இறுதித் தீர்வையன்று நடைபெறும் காட்சி. (மத்தேயு 25: 31-46) இம்மூன்று நற்செய்திகளையும் வாசிக்கும் போது, கிறிஸ்துவை அரசர் என்று அழைப்பதன் உட்பொருளை ஓரளவு உணர முடிகிறது.
இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவரை அரசராக எண்ணிப் பார்த்தவர்கள், அரசராக்க முயன்றவர்கள் ஒரு சிலர்... அந்த நிகழ்வுகள் இப்போது மனதில் நிழலாடுகின்றன. நற்செய்தியில் இயேசுவை அரசர் என்று கூறிய முதல் மனிதர்கள் கீழ்த்திசை ஞானிகள். இயேசு பிறந்ததும், அவரைக் காண நெடுந்தூரம் பயணம் செய்து வந்தனர். அவர்கள் செய்த ஒரே தவறு என்ன? அவர்கள் தேடி வந்த அரசர் உலக அரசரைப் போல் அரண்மனையில் இருப்பார் என்று தப்புக் கணக்கு போட்டனர். எனவே அரசர்கள் தங்கும் நகரான எருசலேமுக்குச் சென்றனர். ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்றனர். ஏரோதிடம், “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள். (மத்தேயு 2: 2) கள்ளம் கபடில்லாமல் அவர்கள் கேட்ட அந்தக் கேள்வி பல நூறு கள்ளம் கபடமற்ற குழந்தைகளின் உயிரைப் பலி வாங்கி விட்டது.
இரண்டாவது சம்பவம் யோவான் நற்செய்தி 6ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இயேசு அப்பத்தைப் பலுகச் செய்து, மக்களின் பசியைத் தீர்த்தார். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். (யோவான் 6 : 14-15)
மூன்றாவது சம்பவம் - எருசலேம் வீதிகளில் நடந்தது. திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், 'ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். (யோவான் 12: 12-13) (மேலும் காண்க: லூக். 19: 38; மாற். 11: 9-10; மத். 21: 9)
வயிறார உண்டதால் வந்த ஆர்வம் இயேசுவை அரசராக்கத் துடித்தது. தங்களுக்கு விடிவு வராதா என்ற ஏக்கம், எருசலேம் வீதிகளில் ஆரவாரமாய் ‘ஓசன்னா’ அறிக்கையாக மாறியது. ஆனால், இப்படி அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப தோன்றி மறையும் ஆர்வம், ஆரவாரம் நிலைத்திருக்காது என்பது சில நாட்களிலேயே நிரூபணமானது. எந்த வீதிகளில் இயேசுவுக்கு அரச மரியாதை கொடுக்கப்பட்டதோ, அதே வீதிகளில் அவர் சிலுவை சுமந்து சென்றபோது, அந்தக் கூட்டம் பயந்து ஒதுங்கியது, அல்லது இயேசுவின் எதிரணியாகத் திரண்ட கூட்டத்தில் சேர்ந்துவிட்டது.
நான்காவது சம்பவம் இயேசுவின் விசாரணைகளின் போது நடந்தது. இயேசுவை அரசர் என்று பிறர் கூறிய வதந்திகளால் பயம்கொண்ட பிலாத்து, இயேசுவிடமே “நீர் அரசரா?” என்று கேட்டார். அந்தக் கேள்வியின் உண்மையான பதிலைக் கண்டுபிடிக்கவும் பிலாத்து பயந்தார். இந்தச் சம்பவத்தை சென்ற ஆண்டு கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நற்செய்தியின் வழி சிந்தித்தோம். (யோவான் 18 : 37)
‘அரசர்’ என்று இயேசு அழைக்கப்பட்ட ஐந்தாவது நிகழ்வு கல்வாரியில் நடந்ததாக இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இயேசுவை அரசராகப் பார்க்கமுடியாத உரோமைய வீர்களின் ஏளனக் குரலும், இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொண்ட குற்றவாளியின் ஏக்கக் குரலும் இன்றைய நற்செய்தியில் ஒலிக்கின்றன.
உரோமைய வீரர்கள் இதுவரை பல அரசர்களைச் சந்தித்தவர்கள். பல அரசர்களுக்கு பணிவிடை செய்தவர்கள். அவர்களுக்குத் தெரிந்த அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலுவையில் குற்றவாளி போல் தொங்கிக் கொண்டிருந்த இயேசு ஒரு பரிதாபமான, போலி அரசனாய் தெரிந்தார். அவர்களது ஏளனத்திற்குத் தூபம் போடும் வகையில் அந்தச் சிலுவை மீது "இவன் யூதரின் அரசன்" என்று ஏக வசனத்தில் எழுதி, வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஏளனக் குரல்களுக்கு நேர் மாறாக, இயேசுவுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் ஏக்கக் குரல் இயேசுவின் அரசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்”.
சிலுவையில் தொங்கும் அந்த உருவத்தை மனிதன் என்று கூட ஏற்றுக்கொள்ள முடியாத அந்த சூழ்நிலையில், இந்தக் குற்றவாளி இயேசுவை ஓர் அரசனாக எப்படி காண முடிந்தது? அவர் இயேசுவிடம் கண்ட அரசத் தன்மை என்ன?
உலக மன்னர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டபோது, அல்லது அவர்கள் தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர்கள் காட்டிய கண்ணியம், அமைதி எதிரிகளையும் அவர்கள் மீது மரியாதை காட்ட வைத்தது என்று வரலாறு சொல்கிறது.
முடி சூடா மன்னர்களான காந்தி, மார்டின் லூத்தர் கிங், ஓமர் முக்தார், Joan of Arc போன்ற தலைவர்களும் தங்கள் எதிரிகளின் ஆழ்ந்த மரியாதையைப் பெற்றவர்கள் என்பது நமக்குத் தெரியும்.
அந்த கண்ணியத்தை, அந்த அமைதியை இயேசுவிடம் கண்டார் இந்தக் குற்றவாளி. அவர் கண்களில் இயேசு அறையுண்டிருந்த சிலுவை ஒரு சிம்மாசனமாய்த் தெரிந்தது. அவர் தலையில் சூட்டப்பட்ட முள்முடி, மணி மகுடமாய்த் தெரிந்தது. எனவே, அந்த அரசரிடம் தன் விண்ணப்பத்தை வைத்தார் அந்தக் குற்றவாளி.
இதுவரை நாம் சிந்தித்த முதல் நான்கு நிகழ்வுகளில் இயேசு தவறான முறையில் "அரசன்" என்று கருதப்பட்டார். இவர்களில் யாருக்கும் இயேசு சரியான பதில் கூட சொல்லவில்லை. தன்னை வாழ்வில் அரசரென அழைத்த, அல்லது அரசராக்க முயன்ற பலருக்கும் பதில் தராத இயேசு, இந்தக் குற்றவாளிக்குப் பதில் தருகிறார். தனது உண்மையான அரசை, தனது உண்மையான அரசத் தன்மையை இந்தக் குற்றவாளி கண்டுகொண்டார் என்பதை இயேசு உணர்ந்ததனால், அவருக்கு மட்டும் சரியான பதிலைத் தருகிறார். “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” (லூக்கா 23: 43) என்று உறுதியளிக்கிறார் இயேசு.
இயேசு நமக்கும் இந்த உறுதியைத் தருகிறார். தன் பேரின்ப வீட்டில் நமக்கும் இடம் தர நம்மை அழைக்கிறார். இதுதான் அவர் நிறுவ வந்த அரசு. இதற்குதான் அவர் அரசர். இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் இந்த அரசு நிறுவப்படும். இந்த அரசில் அரசன் என்றும், அடிமை என்றும் வேறுபாடுகள் இல்லை, எல்லாரும் இங்கு அரசர்கள்... இந்த மன்னர்கள் மத்தியில் இயேசு ஒரு மாமன்னராய் அமர்ந்திருப்பார் என்று தேடினால், நமக்கு ஏமாற்றமே காத்திருக்கும். ஏனெனில், இயேசு அரியணையில் அமர்ந்திருக்க மாட்டார். அவர் நம் எல்லாருடைய பாதங்களையும் கழுவிக்கொண்டு இருப்பார். எல்லாரையும் மன்னராக்கி, அதன் விளைவாக தானும் மன்னராகும் இயேசுவின் அரசுத்தன்மையைக் கொண்டாடத்தான் இந்த கிறிஸ்து அரசர் திருநாள். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற நம் கவிஞன் ஒருவனின் கனவு நினைவிருக்கிறதா? அப்படிப்பட்ட கனவு நனவாகும் ஒரு திருநாள் கிறிஸ்து அரசர் பெருவிழா.







All the contents on this site are copyrighted ©.