2013-11-22 16:01:05

திருத்தந்தை பிரான்சிஸ் : இறையன்பில் நம்பிக்கை வைப்பவர்களுக்கே இறையாட்சி உரித்தாகும்


நவ.22,2013. உலகப் பொருள்களில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு அல்ல, ஆனால், இறையன்பில் நம்பிக்கை வைப்பவர்களுக்கே இறையாட்சி உரித்தாகும் என இவ்வெள்ளிக்கிழமையன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தைப் பார்வையிடும் ஒரு கோடிப் பேரில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில், குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பிலிப்பீன்ஸ் நாட்டவர் என, திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் செயலர் பேரருள்திரு Paul Tighe கூறினார்.
சமய சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் பணிசெய்யும் பிலிப்பீன்ஸ் நாட்டவர் தங்கள் விசுவாசத்தை வாழ்வதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் முக்கியமான கருவியாக இருப்பதாக, மனிலாவில் இவ்வியாழனன்று நிருபர்களிடம் கூறினார் பேரருள்திரு Tighe.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் @Pontifex டுவிட்டர் பக்கத்தை நிர்வகிக்கும் குழுவில் பேரருள்திரு Paul Tigheம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது டுவிட்டர் செய்தியை இஸ்பானியம் அல்லது இத்தாலியத்தில் எழுதுகிறார், பிற மொழிகளில் இக்குழு மொழி பெயர்த்து வெளியிடுகின்றது என்றும் பேரருள்திரு Paul Tighe தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.