திருத்தந்தை பிரான்சிஸ் : நம் பாவங்களை அறிக்கையிடுவது கடினமாக இருந்தாலும், அது நமக்கு
அமைதியைக் கொண்டுவருகின்றது
நவ.19,2013. புனிதர்கள் தெய்வீக மனிதர்களாக இருக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் இதயங்களில்
இறைவனை அன்புகூர்ந்தவர்கள் மற்றும் இந்தத் தங்கள் மகிழ்ச்சியை மற்றவரோடு பகிர்ந்துகொண்டவர்கள்
என, இச்செவ்வாய் தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும்,
இத்திங்கள் தன் டுவிட்டர் பக்கத்தில், நம் பாவங்களை அறிக்கையிடுவது நமக்குக் கடினமாக
இருந்தாலும், அது நமக்கு அமைதியைக் கொணர்கின்றது. நாம் பாவிகள் மற்றும் நமக்கு இறைவனின்
மன்னிப்புத் தேவை எனவும் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், முன்னாள்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அறிவித்த நம்பிக்கை ஆண்டை நிறைவுசெய்யும் விதமாக,
இவ்வாரத்தில் மூன்று முக்கிய நிகழ்வுகளை நடத்தவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். வருகிற
வியாழனன்று உரோம் Camaldolesi அடைபட்ட துறவு இல்லம் சென்று துறவிகளோடு திருநற்கருணை ஆராதனையில்
கலந்துகொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ், புதிதாக திருஅவையில் சேரவிருக்கும் ஏறக்குறைய
500 பேரை வருகிற சனிக்கிழமையறு சந்திப்பார். இவர்கள் 20க்கும் 40 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
இரஷ்யா, மோல்தேவியா, எகிப்து, அல்ஜீரியா, போஸ்னிய-எர்செகொவினா, மொராக்கோ, சீனா, மங்கோலியா
என 47 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.