நவம்பர் 20, அகில உலகக் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாடும், வெவ்வேறு
நாட்களில் இந்நாளை, அந்தந்த நாட்டளவில் கொண்டாடினாலும், உலக அளவில் பொதுவான ஒரு குழந்தைகள்
தினம் கொண்டாடப்படவேண்டும் என்று ஐ.நா.அமைப்பு விரும்பியதால், 1954ம் ஆண்டு இந்நாள் தனிப்பட்ட
முறையில் உருவாக்கப்பட்டது. 1959 மற்றும் 1989ம் ஆண்டுகளில் நவம்பர் 20ம் தேதியன்று
ஐ.நா.அவை குழந்தைகள் உரிமைகள் என்ற பிரகடனத்தை வெளியிட்டது. சென்ற ஆண்டு, இந்நாள் கொண்டாடப்பட்டபோது,
2015ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி வசதிகளாவது
உறுதி செய்யப்படவேண்டும் என்ற வேண்டுகோளை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்டார்.
வருடத்தின் பல்வேறு நாட்களில் பல்வேறு நாடுகளில் இந்நாள் கொண்டாடப்பட்டாலும், 51
நாடுகளில் ஜூன் 1ம் தேதியன்று இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், ஜவகர்லால் நேரு
அவர்கள் பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது. நமது
அண்மை நாடுகளான, பாகிஸ்தானில் ஜூலை 1ம் தேதியும், பங்களாதேஷில் மார்ச் 17ம் தேதியும்,
இலங்கையில் அக்டோபர் 1ம் தேதியும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.