2013-11-16 15:12:39

புதிய ஆயரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் : பொறுப்பிலுள்ள பணியாளர்களிடம் உண்மையான அன்பும் கனிவும் காட்ட வேண்டும்


நவ.16,2103. தனது பொறுப்பில் பணிசெய்யும் வத்திக்கான் பணியாளர்களிடம் உண்மையான அன்பும் கனிவும் காட்டுமாறு, பேரருள்திரு Fernando Vérgez Alzaga அவர்களை ஆயராகத் திருநிலைப்படுத்திய திருப்பலி மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இவ்வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆயர் திருநிலைப்பாட்டுத் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், புதிய ஆயர் Vérgez Alzaga, கிறிஸ்துவின் பணியை இவ்வுலகில் செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வத்திக்கான் பணியாளர்களிடம் உண்மையான அன்பும் கனிவும் கொண்டு அவர்களுக்குத் தந்தையாகவும் சகோதரராகவும் செயல்படுமாறு புதிய ஆயர் Vérgez Alzagaஐக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
உண்மையில், ஆயரின் பணி வழியாக, மீட்பின் செய்தியைத் தொடர்ந்து போதிப்பவரும், விசுவாசத்தின் திருவருள்சாதனங்கள் மூலமாக விசுவாசிகளைத் தூய்மைப்படுத்துபவரும் கிறிஸ்துவே என்றும் திருத்தந்தை இம்மறையுரையில் கூறினார்.
மறைந்த அர்ஜென்டீனா கர்தினால் எத்வார்தோ பிரோனியோ அவர்களுக்கு, தனிப்பட்ட செயலராகவும், உதவியாளராகவும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக, தாழ்மையுடனும் ஆரவாரமின்றியும் பணியாற்றிய புதிய ஆயர் Vérgez Alzaga அவர்களுக்கு, அகிலத் திருஅவையின் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர் Vérgez Alzaga, வத்திக்கான் நகர நாட்டின் நிர்வாகப் பொதுச் செயலராக இவ்வாண்டு ஆகஸ்ட் 30ம் தேதியன்று நியமனம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கிறிஸ்துவின் சேனைகள் சபையைச் சேர்ந்தவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.