கற்றனைத் தூறும் – நவம்பர் 13: பரிவுகாட்டும் உலக நாள்
நவம்பர் 13 - World Kindness Day - அதாவது, பரிவுகாட்டும் உலக நாள் கொண்டாடப்படுகிறது.
அரசு சாரா அமைப்புக்களைச் சார்ந்த பலர் ஒன்றிணைந்து, பரிவுகாட்டும் உலக இயக்கம் (World
Kindness Movement) என்ற ஓர் அமைப்பை 1998ம் ஆண்டு உருவாக்கினர். இவ்வமைப்பினரின் முயற்சிகளால்
பரிவுகாட்டும் உலக நாள் இன்று உலகின் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. கனடா, ஜப்பான்,
ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஒன்றிணைந்த அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடன் 2009ம் ஆண்டு சிங்கப்பூர்,
இந்தியா, இத்தாலி ஆகிய நாடுகளும் இணைந்து இந்நாளைக் கொண்டாடின. 2009ம் ஆண்டு இந்நாளையொட்டி,
சிங்கப்பூரில், அன்பை வெளிப்படுத்தும் ஓர் அடையாளமாக, 45,000க்கும் அதிகமான மஞ்சள் பூக்கள்
மக்களுக்கு வழங்கப்பட்டன. சென்ற ஆண்டு, (2012), ஆஸ்திரேலியாவில் உள்ள 9,000 பள்ளிகளிலும்
இந்நாள் ஒரு விழாநாளாக பள்ளி ஆண்டு கையேட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 15 நாடுகளைச்
சேர்ந்த 33 பேரு நகரங்களில் Flash Mob என்று சொல்லப்படும் நொடிப்பொழுதில் கூடும் கூட்டங்கள்
கூடி, ஒருவரை ஒருவர் அணைத்து, இந்நாளின் வாழ்த்துக்களை ஒரே நேரத்தில் பகிர்ந்துகொண்டனர்.
ஒரே நேரத்தில் நிகழ்ந்த இந்த Flash Mob நிகழ்வுகள் நியூயார்க் நகரில் பெரும் திரைகளில்
ஒளிபரப்பப்பட்டன. "இனம், மதம், மொழி என்ற எல்லைகளைக் கடந்து, மனிதர்களின் கண்ணோட்டம்
விரிவடைய வேண்டும் என்ற கருத்துடன் உருவாக்கப்பட்ட நாள் இது" என்று 'வளைகுடா செய்திகள்'
(Gulf News) இந்நாளைக் குறிப்பிட்டுள்ளது.