நவ.08,2013. இப்பூமியின் சுற்றுச்சூழலுக்கு வேண்டுமென்றே பாதிப்பை ஏற்படுத்துபவர்கள்
மாபெரும் பாவத்தைச் செய்பவர்கள் என்றும், அவர்கள் திருநற்கருணை வாங்கக் கூடாது என்றும்
தென் இத்தாலியின் நேப்பிள்ஸ் கர்தினால் கிரெசென்சியோ சேப்பே எச்சரித்துள்ளார். Greenaccord
என்ற கிறிஸ்தவ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அமைப்பு Castel dell'Ovo என்ற இடத்தில் நடத்திய
கருத்தரங்கில் இவ்வாறு உரையாற்றிய கர்தினால் சேப்பே, இப்பூமியை வேண்டுமென்றே அசுத்தம்
செய்பவர்கள் கடவுளின் அருள் நிலையில் இல்லையெனவும், அவர்கள் திருநற்கருணை உட்கொள்ளக்
கூடாது எனவும் கூறினார். புற்றுநோய்களை வருவிக்கும் நச்சுகலந்த கழிவுகளை உள்ளூர் மாஃபியா
குற்றக் கும்பல்கள் அண்மையில் நேப்பிள்ஸ் நகரத்துக்கு அருகில் புதைத்துள்ளன என்ற செய்திகள்
தினத்தாள்களில் வெளியானதையடுத்து இவ்வாறு எச்சரித்துள்ளார் கர்தினால் சேப்பே. பொதுவான
ஒழுக்கநெறிக் கூறுகளில் திருஅவையின் பங்கு குறித்து உள்ளூர் அருள்பணியாளர்களும், தியாக்கோன்களும்,
பொதுநிலை சகோதரர்களும் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார் கர்தினால் சேப்பே.