அலெப்போவிலிருந்து கடத்தப்பட்ட இரு ஆயர்கள் வைக்கப்பட்டுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
-லெபனன் பாதுகாப்பு அமைச்சகம்
அக்.31,2013. சிரியாவில் அலெப்போ நகரிலிருந்து கடத்தப்பட்ட இரு ஆயர்கள் வைக்கப்பட்டுள்ள
இடத்தைக் கண்டறிந்துள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாகவும் லெபனன் அரசின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இவ்வாண்டு ஏப்ரல்
மாதத்தில் அலெப்போ நகரிலிருந்து Boulos al-Yazigi மற்றும் Yohanna Ibrahim என்ற இரு ஆயர்கள்
அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டனர். இவ்விருவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ள
இடத்தைக் கண்டறிந்துள்ளதாக லெபனன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரியான தளபதி Abbas
Ibrahim அவர்கள் இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார். ஆயர்களைக் கடத்தியவர்களுடன்
லெபனன் பாதுகாப்பு அமைச்சகம் தொடர்புகள் மேற்கொள்ள முயற்சிகள் செய்து வருவதாகவும், இந்த
முயற்சிகள் நல்ல பலனளிக்கும் என்று நம்புவதாகவும் தளபதி Ibrahim அவர்கள் விடுத்த அறிக்கையை
ஃபீதெஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால்
Bechara Boutros Rai அவர்கள், கடந்த வாரம் கத்தார் இளவரசர் Tamim bin Hamad al-Thani
அவர்களைச் சந்தித்தபோது இவ்விரு ஆயர்களை விடுவிக்கும் முயற்சிகளில் அவர் தலையிட வேண்டும்
என்ற வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.