பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது. தயிரா நான் இதையெல்லாம் எடுத்துக்கொள்ள மாட்டேன்
என்று பெருமையாகச் சொல்வார்கள். தயிர் நம் உடலுக்கு ஓர் அருமருந்து. அது குளிர்ச்சியைத்
தரும். நல்ல ஜீரணசக்தியை தரும். தயிரில் முக்கியமான வைட்டமின், புரதம் ஆகிய சத்துகள்
அடங்கியுள்ளன. கால்சியமும், வைட்டமின் 'பி'யும் தயிரிலிருந்தே பெறப்படுகின்றன. பால்,
வயிற்றை மந்தமாக்கி ஜீரணசக்தியைக் குறைக்கும். ஆனால் தயிர், பாலைவிட விரைவாக ஜீரணமாகும்
சக்தி கொண்டது. சரியான நேரத்துக்கு உணவு உண்பது பல உடல் உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள
வழி செய்யும். ஆனால் வேலைப்பளுக் காரணமாக உரிய நேரத்தில் உணவு உண்ண முடியவில்லை என்றால்
வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வயிற்றுப்புண் பிரச்சனையில் இருந்து தப்பித்துக்
கொள்ள தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வயிற்றுப் புண்ணுக்குக் காரணமாகும்
கிருமிகள் தயிர் மற்றும் மோரில் உள்ள லாக்டிக்(Lactic) அமிலத்தால் அழிக்கப்படுகின்றன.
அதனால் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளுவது நல்லது. * பாலைத்
தயிராக மாற்றும் கிருமி, குடலில் உருவாகும் நோய்க் கிருமியின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
* தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க, தேங்காயை சிறிய துண்டாக்கிச் சேர்த்தால் புளிக்காது. *
வெண்டைக்காயை வதக்கும்பொழுது ஒரு கரண்டி தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல்
இருக்கும். * வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம்
மாறாது. * மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.