2013-10-25 15:57:23

தெய்வீகக் குரல்வளம் கொண்ட சகோதரர் Alessandro அவர்களின் இரண்டாவது இசைத்தட்டு 'மகிழ்வின் குரல்'


அக்.25,2013. புனித பிரான்சிஸ் துறவுச் சபையைச் சேர்ந்த சகோதரர் Alessandro அவர்களின் இரண்டாவது இசைத்தட்டு 'மகிழ்வின் குரல்' (Voice of Joy) என்ற பெயருடன், அக்டோபர் 28, வருகிற திங்களன்று வெளியிடப்படுகிறது.
தெய்வீகக் குரல்வளம் கொண்ட சகோதரர் Alessandro அவர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய முதல் குறுந்தகடு 'அசிசியிலிருந்து குரல்' (Voice from Assisi) என்ற பெயரில், சென்ற ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்பட்டு, இசை உலகில் நல்ல வரவேற்பு பெற்றது.
Alessandro Brustenghi என்ற இயற்பெயர் கொண்ட சகோதரர் Alessandro அவர்கள், 1999ம் ஆண்டு, தன் 21வது வயதில் அசிசி நகரில் புனித பிரான்சிஸ் துறவு மடத்தில் சேர்ந்தார்.
தச்சு வேலை செய்வதும், அசிசி திருத்தலத்திற்கு வரும் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருப்பதும், அசிசி திருத்தல பசிலிக்காவில் இசைக்குழுவுடன் இணைந்து பாடுவதும் இவரது பணிகள்.
இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கு, இசையே சிறந்த வழி என்று கூறும் சகோதரர் Alessandro அவர்கள், Facebook, Twitter ஆகிய சமுதாய வலைத்தளங்கள் வழியாக பல்லாயிரம் இளையோருடன் தொடர்பு கொண்டுள்ளார்.
இவரது குரலைத் தாங்கி வெளிவரும் இசைத் தகடுகளின் விற்பனையின் மூலம் வரும் தொகையை, புனித பிரான்சிஸ் துறவு சபையினர் நடத்தும் பிறரன்புப் பணிகளுக்கு சகோதரர் Alessandro அவர்கள் அளித்துள்ளார்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.