'சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தயாரில்லை': இலங்கை
அக்.25,2013. இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நிகழ்ந்த போரின்போது நடந்துள்ளதாகக் கூறப்படும்
போர்க் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும்
ஒத்துழைக்கப் போவதில்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்
முடிவுக்கு வந்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது, ஆட்கடத்தல், ஏறத்தாழ
40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டது, பல ஆயிரக் கணக்கான மக்கள் காணாமல்போனது என்பன போன்ற
பலக் குற்றச்சாட்டுக்கள் உலக அளவில் பல மனித உரிமை அமைப்புக்களால் எழுப்பப்பட்டுள்ளன.
இத்தகையக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்துவதற்கு வருகிற மார்ச் மாதத்துக்குள்
இலங்கை அரசு அக்கறை காட்டாவிட்டால், சர்வதேச விசாரணை ஒன்று தேவைப்படலாம் என்று ஐநா மனித
உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை கூறியிருப்பதற்கு பதிலளித்த அரசு, இது குறித்த விசாரணைகளை,
தாங்களே நடத்திவருவதாகவும் கூறிவருகிறது.