வத்திக்கான் தொலைக்காட்சி மையம் திருஅவையை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும், திருத்தந்தை
பிரான்சிஸ்
அக்.18,2013. CTV என்ற வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் பணி, நற்செய்திக்கும் திருஅவைக்குமான
சேவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட,
வத்திக்கான் தொலைக்காட்சி மையம் நிறுவப்பட்டதன் முப்பதாவது ஆண்டு நிறைவுவிழாவுக்கென செய்தி
அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த பத்தாண்டுகளில் தொழில்நுட்பம் மிக வேகமாகப்
பயணம் செய்துள்ளது என்றும், இதற்கேற்ப உலகளாவிய சமூகத் தொடர்பில் நற்செய்தியின் கூறுகளும்
அறிவிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். உப்பும் ஒளியும் உலகை வளப்படுத்தி ஒளிர்விப்பதுபோன்று
ஊடகத்துறையும், இயேசு கிறிஸ்துவின் ஒளியைத் தாங்கிச் சென்று மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு
உதவ வேண்டுமெனவும் கூறினார் திருத்தந்தை. வத்திக்கான் தொலைக்காட்சி மையம், இன்றைய
உலகில் திருஅவையின் வாழ்வு மற்றும் போதனைகளை உடனுக்குடன் அறிவித்து வருகின்றது என்று
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், இம்மையத்தின் பணி திருஅவையின் பணி, திருஅவைக்குள் நற்செய்தி அறிவிக்கும் பணி
என்பதை மறவாமல் இருக்கவும் கேட்டுக்கொண்டார். திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற 2ம்
ஜான் பால் அவர்களின் ஆர்வத்தால், 1983ம் ஆண்டில் வத்திக்கான் தொலைக்காட்சி மையம் உருவாக்கப்பட்டது.