அக்.18,2013. காமரூன் நாட்டு அரசுத்தலைவர் Paul Biya அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து ஏறக்குறைய 15 நிமிடங்கள் உரையாடினார். இச்சந்திப்புக்குப்
பின்னர், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி
அவர்களையும் சந்தித்தார் காமரூன் அரசுத்தலைவர் Biya. ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த
பகுதி தொடர்புடைய பல்வேறு சவால்கள் குறித்தும், அப்பகுதியில் அமைதியும் பாதுகாப்பும்
நிலவ காமரூன் நாடு தன்னை அர்ப்பணிக்க வேண்டுமென்பது குறித்தும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன
என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது. காமரூன் நாட்டுக்கும், தலத்திருஅவைக்கும்
இடையே நிலவும் உறவு திருப்தியாக இருப்பதாகவும், அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவையின்
சட்டரீதியான நிலைமை குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் இச்சந்திப்புக்களில்
பேசப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் அறிவித்தது. காமரூன் அரசுத்தலைவர்
Paul Biya அவர்கள், 13 பேர் கொண்ட குழுவுடன் திருப்பீடத்துக்குச் சென்றிருந்தார். காமரூன்,
ஆப்ரிக்காவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள அமைதியான நாடாகும்.