'பக்ரீத் விழா'வைக் கொண்டாடிய இஸ்லாம் மதத்தினருக்கு நைஜர் நாட்டின்
ஆயர்கள் அனுப்பிய வாழ்த்துக்கள்
அக்.16,2013. நம்பிக்கை கொள்வோர் அனைவரின் தந்தையான ஆபிரகாம் செலுத்திய பலியை நினைவுகூரும்
இஸ்லாம் சகோதரர்களை தாங்கள் வாழ்த்துவதாக ஆப்ரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர். அக்டோபர்
15, இச்செவ்வாயன்று ஆபிரகாம் செலுத்திய பலியை நினைவுகூரும் வகையில், 'பலி விழா' என்று
பொருள்படும் பக்ரீத் (Aid El Adha) விழாவைக் கொண்டாடிய இஸ்லாம் மதத்தினர் அனைவருக்கும்
நைஜர் நாட்டின் ஆயர்கள் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர். இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட
இவ்விழா, மலைபோல் குவிந்துள்ள பிரச்சனைகளின் மத்தியில் கொண்டாடப்பட்டது என்பதைக் கூறும்
ஆயர்களின் செய்தி, நம்மைச் சூழ்ந்துள்ள துயரங்கள், நம்மை ஒருங்கிணைக்கும் கருவியாக அமையவேண்டும்
என்ற தங்கள் ஆவலையும் வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்களாக
இருந்தாலும் சரி, அவர்கள் வன்முறைகளைக் கையாளும்போது மனித குலத்திற்கும், இறைவனுக்கும்
எதிராகச் செயலாற்றுகின்றனர் என்பதையும் நைஜர் ஆயர்களின் செய்தி எடுத்துரைக்கிறது.