2013-10-16 15:49:16

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்கள் மீது கொண்டுள்ள அன்பு தெளிவாகிறது - பேராயர் Vincenzo Paglia


அக்.16,2013. அடுத்த ஆண்டு கூடவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கு, குடும்பங்களை மையக்கருத்தாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்துள்ளது, குடும்பங்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பைத் தெளிவாக்குகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் 19ம் தேதி முடிய உரோம் நகரில் கூடவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கு, "நற்செய்தி அறிவிப்புச் சூழலில், குடும்பங்கள் சந்திக்கும் மேய்ப்புப்பணி தொடர்பான சவால்கள்" என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தந்தை தெரிவு செய்துள்ள இக்கருத்தையொட்டி, CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், குடும்பப் பணிகள் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Vincenzo Paglia அவர்கள் இவ்வாறு கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கமும், 1980ம் ஆண்டு திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற 2ம் ஜான் பால் அவர்களால் கூட்டப்பட்ட சிறப்பு ஆயர் மாமன்றமும் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளன என்று கூறிய பேராயர் Paglia அவர்கள், தெளிந்த அறிவுடனும், துணிவுடனும் திருஅவை பயணிக்க வேண்டிய வழியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நம்மை வழிநடத்துகிறார் என்றும் கூறினார்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.