2013-10-15 16:21:24

திருப்பீடச் செயலகம், கர்தினால் பெர்த்தோனே அவர்களுக்கு நன்றி


அக்.15,2013. "திருப்பீடச் செயலகம், கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அவர்கள் ஆற்றிய பணிகளுக்கு நன்றிகூறும் அதேவேளை, புதிய திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின் அவர்களை வரவேற்கிறது" என்ற செய்தியை தனது Twitter பக்கத்தில் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது அச்செயலகம்.
மேலும், பேராயர் பரோலின் அவர்கள், திருப்பீடச் செயலராக நியமனம் செய்யப்பட்டிருப்பது நல்லதொரு தேர்வு என்றும், இவர் தனது புதிய பணியை மிக, மிக நன்றாகச் செய்வார் என்றும், திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறியுள்ளார்.
பேராயர் பரோலின் அவர்கள் மேய்ப்புப்பணி கண்ணோட்டம் உள்ளவர், நன்றாக பேச்சுவார்த்தை நடத்துபவர், சமநிலையில் இருப்பவர் மற்றும் எதார்த்தமானவர் என்று பாராட்டிப் பேசியுள்ளார் கர்தினால் Tauran.
பேராயர் பரோலின் பற்றி வத்திக்கான் வானொலியில் பேசியபோது இவ்வாறு பாராட்டியுள்ளார் கர்தினால் Tauran. இவர், திருப்பீடச் செயலகத்தில் பேராயர் பரோலின் அவர்களுடன் சேர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றியிருப்பவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.