2013-10-14 16:23:19

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியாவுக்கு மனுக்குலத்தை அர்ப்பணிப்பு


அக்.14,2013. அன்னை மரியே, உங்கள் பார்வையில் நாங்கள் ஒவ்வொருவரும் விலையேறப் பெற்றவர்கள், உமது உள்ளத்தில் யாருக்கும் இடமின்றி போகாது என்ற வார்த்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியாவுக்கு மனுக்குலத்தை அர்ப்பணித்தார்.
அக்டோபர் 13, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியத் திருப்பலிக்குப் பின்னர், கூடியிருந்த இலட்சக்கணக்கான பக்தர்களையும், இன்னும் உலகின் பல நாடுகளிலும் வாழும் அனைத்து மக்களையும் மரியன்னையின் பாதுகாவலில் அர்ப்பணித்தார்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக, அன்னை மரியாவின் நாள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்பட்டது. இச்சிறப்பு நிகழ்ச்சிக்கென பாத்திமா அன்னை மரியாவின் திருத்தலத்தில் வணங்கப்படும் திரு உருவம் வத்திக்கானுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.
அன்னையின் இத்திரு உருவத்திற்கு முன்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனுக்குலத்தை மீண்டும் ஒருமுறை அன்னை மரியாவின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.

1981ம் ஆண்டு மேமாதம் 13ம் தேதி பாத்திமா அன்னை விழாவைக் கொண்டாட போர்த்துகல் நாட்டின் பாத்திமா அன்னை திருத்தலத்திற்குச் சென்றிருந்த முன்னாள் திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான்பால் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் எழுதிய அர்ப்பண செபம், அதே ஆண்டு ஜூன் 7ம் தேதியன்று, உரோம் நகர் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் வாசிக்கப்பட்டது.
மீண்டும், 1982ம் ஆண்டு மேமாதம் 13ம் தேதி பாத்திமாவுக்குச் சென்றிருந்த திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் அன்னை மரியாவுக்கு மீண்டும் ஒருமுறை இவ்வுலகை அர்ப்பணித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.