மனிதர் அதிகம் உண்ணும் உணவில் சத்தில்லாத சர்க்கரையும் ஒன்று. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது
இதர உணவுகள் "குளுக்கோஸ்' ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன. சர்க்கரை உடலுக்கு எந்தச் சத்தையும்
கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள சத்தையும் இது ஈர்த்துகொள்கிறது. அதனால்தான்,
இதனை சத்தில்லாத கலோரி உணவு என்றும் அழைக்கிறோம். புற்றுநோய், எலும்புமுறிவு நோய், மூட்டு
வியாதிகள், உடல் பருமன், இதய நோய், இரத்த அழுத்தம், சரும நோய், விரைவில் முதிர்ச்சி,
பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரக கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்புத் தொற்றுநோய், அளவுக்கு
மீறிய சுறுசுறுப்பு, வன்செயல், பரவலாக இருக்கும் நீரழிவு நோய், இப்படி சர்க்கரை உடலில்
உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட்
மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம், குழந்தைகள் நோயாளிகளாக
உருவாகின்றனர். சர்க்கரை அதிகமாகவும், வைட்டமின் மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும் உள்ள
உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு, உடம்பில் வேதிய மாறுதல் ஏற்பட்டு அளவுக்கு மிஞ்சிய
துடுக்குத்தனத்தையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கும், நொறுக்குத்
தீனிகளுக்கும் அதிகத் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இனிப்பான பொருட்களை
உண்ணும்போது வாயில் உள்ள நுண்கிருமிகள், ஒருவித அமிலத்தை உருவாக்கும். இந்த அமிலம், பற்களில்
உள்ள "எனாமலை' அரித்து ஓட்டையாக்கி, பல்லில் சொத்தையை ஏற்படுத்தும். சர்க்கரையும், கொழுப்பும்
உள்ள உணவுப் பொருட்கள், இரத்தத்தில் "கொலஸ்ட்ரால்' அளவை அதிகரித்து விடுவதால், இதய நாளங்கள்
அடைபடுகின்றன. இதனால், இரத்தம், ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபடுகிறது. இது
தொடருமானால், ஒருவருடைய தசைநார்கள் இறந்துபோய், மாரடைப்பை ஏற்படுத்தும். இந்த மாரடைப்பிற்கு
குழந்தை பருவத்திலேயே நாம் வித்திட்டு விடுகிறோம். தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரையை
நாம் உணவில் சேர்த்தால், 92 விழுக்காட்டு வெள்ளை அணுக்கள் உருவாவது தடைசெய்யப்படுகிறது.
இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான நுண்கிருமிகளை எதிர்க்கும். உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால்
அதைச் சுத்தப்படுத்த அதிகமாக "இன்சுலின்' வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும்
"இன்சுலினுக்கும்' நோய் எதிர்ப்புச் சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான, புரோஸ்டேகிளேன்டான்-க்கும்
அதிகத் தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கட்டியை உருவாக்குகிறது.