அக்.10,2013. கொலம்பஸ் தளபதிகள், தங்கள் நிதி உதவியால் மட்டுமல்ல, மாறாக, தங்கள் செபங்களாலும்,
பணிகளாலும் புனித பேதுருவின் வழித் தோன்றலான உரோமைய ஆயருக்கு உறுதுணையாக விளங்குகின்றனர்
என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மகிழ்வை வெளியிட்டார். அக்டோபர் 10, இவ்வியாழன்
மதியம், கொலம்பஸ் தளபதிகள் என்று அழைக்கப்படும் ஒரு கத்தோலிக்கப் பணி அமைப்பைச் சார்ந்த
80 பேரை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்கள் ஆற்றும் பணிகளைப் பாராட்டி,
செய்தியொன்றை வழங்கினார். தொலைநோக்குப் பார்வையுடன், வணக்கத்திற்குரிய அருள் பணியாளர்
Michael McGivney அவர்கள் உருவாக்கிய கொலம்பஸ் தளபதிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து
புளிப்பு மாவாக இவ்வுலகில் செயலாற்ற திருத்தந்தை அழைப்பு விடுத்தார். நம்பிக்கை ஆண்டின்
இறுதியை நெருங்கிவரும் இவ்வேளையில், இவ்வமைப்பில் உள்ள அனைவரையும், அவர்கள் குடும்பங்களையும்,
திருக்குடும்பத்தின் பாதுகாவலராகிய புனித யோசேப்புவின் கண்காணிப்பில் ஒப்படைத்து, அவர்களுக்கு
தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாகத் திருத்தந்தை கூறினார்.