2013-10-09 16:04:12

அமெரிக்காவில் சிறப்பிக்கப்படும் 'வாழ்வுக்கு மதிப்பு' மாதத்திற்கு கர்தினால் Séan O’Malley செய்தி


அக்.09,2013. கிறிஸ்துவைப் போல் நாமும் ஒருவர் ஒருவரை மதிக்கவும், அன்புகூரவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று அமெரிக்காவின் பாஸ்டன் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் Séan O’Malley அவர்கள் கூறினார்.
அக்டோபர் 6, கடந்த ஞாயிறு முதல் ஒரு மாத அளவில் அமெரிக்க கத்தோலிக்கத் தலத்திருஅவை 'வாழ்வுக்கு மதிப்பு' மாதத்தைச் சிறப்பிக்கின்றது. இந்த மாதத்தையொட்டி, அமெரிக்க ஆயர் பேரவையின் வாழ்வை வலியுறுத்தும் பணிக்குழுவின் தலைவர், கர்தினால் O’Malley அவர்கள் விடுத்த ஒரு செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
"உங்கள் இதயங்களை வாழ்வுக்குத் திறந்துவிடுங்கள்" என்ற மையக்கருத்துடன், 2013 அக்டோபர் முதல், 2014 அக்டோபர் வரை வாழ்வை வலியுறுத்தும் ஆண்டு கொண்டாடப்படும் என்று அமெரிக்க ஆயர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருவில் உருவாவது முதல், கல்லறை வரை ஒவ்வொரு மனித உயிரும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்த இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் பங்குத் தளங்களில் மேற்கொள்ளப்படும் என்று கர்தினால் O’Malley அவர்கள் கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.