2013-10-05 15:03:41

திருத்தந்தை பிரான்சிஸ் : கடவுளின் வார்த்தைக்குச் செவிசாய்த்து நம் ஆண்டவரோடு நடங்கள்


அக்.05,2013. இறைவார்த்தைக்குச் செவிமடுத்து நம் ஆண்டவரோடு நடந்து சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அசிசி நகரின் புனித ரூஃபினா பேராலயத்தில் அசிசி மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் மேய்ப்புப்பணி அவையின் உறுப்பினர்களைக் இவ்வெள்ளி மாலையில் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மறைமாவட்டத்தை நடத்துவதற்கு மேய்ப்புப்பணி அவைகள் முக்கியம் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, மறைமாவட்ட பேரவைக்கென மூன்று சிந்தனைகளை முன்வைத்தார்.
முதலாவதாக, அருள்பணியாளர்கள், பெற்றோர், வேதியர்கள் என திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரும் இறைவார்த்தையைக் கவனமுடன் உற்றுக் கேட்க வேண்டும் என்றும், அனைவரும் விசுவாசத்தைப் பிறரோடு இன்னும் சாரமுள்ள வகையில் பகிர்ந்து கொள்வதற்கு, கடவுளோடு ஒத்திணங்கி வாழவேண்டுமென்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டாவதாக, திருஅவை சமூகம் நம் ஆண்டவரோடு மக்கள் மத்தியில் வாழ வேண்டும், குருக்கள் மக்கள் மத்தியில் உண்மையிலேயே பிரசன்னமாய் இருந்து, அவர்களது பயணத்தில் அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவளித்து பகிர்ந்து வாழ வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, மன்னிப்பதும், மன்னிப்பளிப்பதும் குடும்பத்துக்கும், சமூக வாழ்வுக்கும் இன்றியமையாதவை எனவும் சொல்லி, சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு மறைப்பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் புனித கிளாரா பசிலிக்காவுக்கும் சென்று, அப்புனிதரின் கல்லறை முன்பாகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.