2013-10-03 16:17:49

Lampedusa தீவுக்கருகே படகு விபத்தில் உயிரிழந்தோருக்காக இறைவனிடம் மன்றாடுவோம் - திருத்தந்தை


அக்.03,2013. Lampedusa தீவுக்கருகே கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தோருக்காக இறைவனிடம் மன்றாடுவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை Twitter செய்தியொன்றை வெளியிட்டார்.
அக்டோபர் 2, இப்புதன் இரவு இத்தாலியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள Lampedusa எனும் தீவை நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு பெரும் படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது. இப்படகில் 500 பேர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சொமாலியா நாட்டைச் சார்ந்த அகதிகளைத் தாங்கிவந்த இப்படகில் ஏற்பட்ட விபத்தில், 141 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்; இதுவரை 82 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 250க்கும் மேற்பட்டோரை இன்னும் தேடி வருகின்றனர்.
இவ்வியாழனன்று திருத்தந்தை வெளியிட்ட மற்றொரு Twitter செய்தி இளையோருக்கென எழுதப்பட்டுள்ளது. அன்பு இளையோரே, எதிர்காலத்தைக் குறித்து பல திட்டங்களையும், கனவுகளையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள். ஆனால், இவற்றின் மத்தியில் கிறிஸ்து உள்ளாரா? என்ற கேள்வியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் எழுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.