2013-10-01 16:50:11

மனித வாழ்வு குறித்த உண்மை அனைவரோடும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும், பாஸ்டன் கர்தினால்


அக்.,01,2013. மனித வாழ்வு குறித்த உண்மையை அனைத்துக் கத்தோலிக்கரும் உலகோடு பகிர்ந்துகொள்ளுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு பாஸ்டன் கர்தினால் Sean P. O'Malley அவர்கள் கேட்டுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் அக்டோபர் மாதம் வாழ்வை மதிக்கும் வாரமாகச் சிறப்பிக்கப்படவிருப்பதையொட்டி, அந்நாட்டு ஆயர் பேரவையின் வாழ்வுக்கு ஆதரவான ஆணையத் தலைவர் கர்தினால் O'Malley அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கேட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுக்கும் அழைப்புக்கு உடனடியாகச் செவிமடுத்து பிறர்மீது அன்பும், கருணையும் கொண்ட வாழ்வுக்கு நம் இதயங்களைத் திறப்போம் எனவும் கர்தினால் O'Malley அவர்கள் கேட்டுள்ளார்.
1970களின் தொடக்கத்தில் அமெரிக்க உச்சநீதிமன்றம் கருக்கலைப்பு குறித்த தீர்மானத்தை வெளியிட்டதிலிருந்து சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கருக்கலைப்புக்களினால் 5 கோடியே 50 இலட்சம் உயிர்கள் இறந்துள்ளன என்ற கவலையையும் அவ்வறிக்கையில் வெளியிட்டுள்ளார் கர்தினால் O'Malley.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.