அக்.,01,2013. உலக அளவில் துன்பங்களும் நெருக்கடிகளும் குடியரசுக்கான மாற்றங்களும் இடம்பெற்றுவரும்
இக்காலத்தில், மகாத்மா காந்தி அவர்களின் புரிந்துணர்வு மற்றும் அமைதி குறித்த செய்தியை
நாம் அனைவரும் சிந்திக்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன். காந்திஜி
பிறந்த அக்டோபர் 02ம் தேதி அனைத்துலக வன்முறையற்ற நாளாகச் சிறப்பிக்கப்படுகின்றது. இந்நாளுக்கென
செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், வன்முறையற்ற மற்றும் நிலையான அமைதி நிலவும்
உலகை அமைக்க நாம் ஒன்றிணைந்து உழைப்போம் எனக் கேட்டுள்ளார். பகையுணர்வைக் கைவிடுவதைவிட
ஆயுதத்தை எடுப்பதும், மன்னிப்புக்கான வழியைத் தேடுவதைவிட குறை கண்டுபிடிப்பதும் எளிதாக
இருக்கலாம் என்று கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், மகாத்மா காந்தி அவர்களின் எடுத்துக்காட்டான
வாழ்வால் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் கவரப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கின்றது
என்றும் கூறியுள்ளார்.