2013-09-28 15:20:02

திருத்தந்தை பிரான்சிஸ் : சிலுவையைக் கண்டு விலகிச் செல்லாதிருக்க வரம் கேட்போம்


செப்.,28,2013. சிலுவையைக் கண்டு விலகிச் செல்லாதிருக்க வரம் கேட்போம் என்று இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்’ என்ற இயேசுவின் வார்த்தைகள், தாங்கள் வெற்றிப் பயணம் மேற்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டிருந்த அவரின் சீடர்களுக்குப் புரியவில்லை, ஆயினும் இயேசு சொன்னது பற்றி அவரிடம் விளக்கம் கேட்க அவர்கள் அஞ்சினார்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பேதுரு உட்பட இயேசுவின் சீடர்கள் சிலுவையைக் கண்டு அஞ்சினார்கள், இவர்கள் மட்டுமல்ல, இயேசுவும் அஞ்சினார், தனக்கு வரப்போகும் துன்பக்கலத்தைக் கண்டு புனித வியாழன் இரவில் இயேசு இரத்த வியர்வை சிந்தினார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்தி அறிவிப்புப்பணியிலும் இந்தச் சிலுவை நமக்குப் பயத்தை ஏற்படுத்துகின்றது என்றும் கூறினார்.
சிலுவையின் அருகில் இயேசுவின் தாய் அன்னமரியா நின்றார், எனவே சிலுவையைக் கண்டு நாம் விலகிச் செல்லாதிருக்க இயேசுவிடம் வரம் கேட்போம் என்று மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.