ஒரே செடியில் தக்காளி, உருளைக் கிழங்கு, பிரிட்டன் நிறுவனம் சாதனை
செப்.,28,2013. ஒரே செடியில் தக்காளியும், உருளைக்கிழங்கும் விளையும் நவீன முறையைக் கண்டுபிடித்து
பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று சாதனை படைத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த Thompson
& Morgan என்ற நிறுவனம் வேளாண்மையில் புதுமைகளைப் புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன யுக்தியை இந்நிறுவனம்
கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக்கிழங்கையும், தக்காளியையும் ஒரே
செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது. இது குறித்துப் பேசிய அந்நிறுவன தலைவர்
பவுல் ஹான்சர்டு (Paul Hansord) இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும்
கடினமான காரியம் என்று கூறினார். மரபியல் மாற்றங்களைச் செய்து இதற்குமுன் இது போன்ற
செயல்களில் அறிவியலாளர்கள் வெற்றி கண்டுள்ளனர், எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல்,
இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில்
முதல் முறையாகத் தற்போது விளைவித்துள்ளோம் என்றும் ஹான்சர்டு கூறினார். இரு தாவரங்களின்
திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில்
வளர்க்கப்பட்டன. அதன்பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப்பகுதியில்
உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது. சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த
முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதால்
மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கண்டறியப்பட்ட
இந்த முறையை தற்போது நியூசிலாந்து விவசாயிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.