2013-09-27 16:02:46

திருத்தந்தை பிரான்சிஸ், OPCW நிறுவன இயக்குனர் சந்திப்பு


செப்.,27,2013. வேதிய ஆயுதத் தடை நிறுவனமான OPCWன் இயக்குனர் Ahmet Uzumcu அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் தனியாகச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, உலகில் வேதிய ஆயுதங்கள் தடை செய்யப்படுவதற்கு OPCW நிறுவனம் எடுத்துவரும் முயற்சிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த பின்னர், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் நேரடிப் பொதுச்செயலர் பேரருள்திரு Antoine Camilleri அவர்களையும் OPCWன் இயக்குனர் Uzumcu சந்தித்தார் என அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதி ஏற்பட வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் அழைப்பு விடுத்தபோது உலகில் வேதிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை வன்மையாய்க் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.