செப். 26, 2013. கற்றனைத்தூறும்...... ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!
கொசுவர்த்திச் சுருள்களிலும், கொசுவிரட்டி வில்லைகளிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட
பல்வேறு வேதியக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேதியப்பொருட்களின் அடர்த்தி, நாம்
இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து
இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக மாலைநேரங்களில்தான்
கொசுக்கள் வீடுகளுக்குள் படையெடுக்கும். அந்த நேரத்தில் கதவு, ஜன்னல்களைப் பூட்டிவிடுவது
வழக்கம். அப்படிச் செய்வதால், வீட்டிற்குள் புதிய காற்று வருவது தடை செய்யப்பட்டு விடுகிறது. இந்த
சூழ்நிலையிலும், வீட்டிற்குள் புகுந்துவிடும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்
சுருள், கொசுவிரட்டி வில்லை ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இப்படிச் செய்வதால், அவற்றில்
இருந்து வெளியேறும் நச்சுப்புகையும், தீங்கு ஏற்படுத்தும் வாயுக்களும் மட்டுமே வீட்டிற்குள்
அதிகம் உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது. ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்துபோய் விடுகிறது. கொசுவை
விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச்சுருள், கொசுவிரட்டி வில்லை ஆகியவற்றைப்
பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் நுரையீரல்
முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை எடுத்துக்கொள்ள இயலாமலும் போய்விட
வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர். கொசுவிரட்டி வில்லையில் இருந்து
வெளிவரும் புகையை அப்போதுதான் பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள்
சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக்க் கூறி
எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று. மும்பையில் நடத்தப்பட்ட
ஓர் ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் வேதியப்பொருள் சிலருக்கு மலட்டுத்தன்மையை
ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள
டயோக்சின், புற்றுநோயை உருவாக்கக்கூடியது, அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல
இழக்கச் செய்யும் தன்மை கொண்டது. இத்தகையச் சூழலில், கொசுக்களிடம் இருந்து தப்பிப்பதற்குக்
கொசுவலையே சிறந்த வழி. ஆதாரம் : ‘ஆழ்கடல் களஞ்சியம்’ இணையத்தளம்