2013-09-19 16:51:52

திருத்தந்தை Cagliari நகரில் மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தின் முழு விவரங்கள்


செப்.19,2013. செப்டம்பர் 22, வருகிற ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சர்தேனியா என்ற தீவில் அமைந்துள்ள Cagliari என்ற நகருக்கு மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தின் முழு விவரங்கள் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டன.
ஞாயிறு காலை 7.30 மணிக்கு உரோம் நகர் Ciampino விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தையின் விமானம், 8.15 மணிக்கு Cagliari-Elmas என்ற விமான நிலையத்தை அடையும். அங்கிருந்து காரில் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை அவர்கள், 8.45 மணிக்கு Carlo Felice என்ற சதுக்கத்தில் தொழில் உலகின் பல்வேறு பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றுவார்.
அங்கிருந்து மீண்டும் காரில் புறப்படும் திருத்தந்தை, இந்த மேய்ப்புப்பணிப் பயணத்தை அவர் மேற்கொள்ள முக்கியக் காரணமாக அமைந்த பொனாரியா (Bonaria) அன்னை மரியா திருத்தலத்திற்கு 9.45 மணிக்கு சென்றடைவார்.
நகரின் முக்கிய அதிகாரிகளை இத்திருத்தலத்தின் முகப்பில் சந்திக்கும் திருத்தந்தை, 10.00 மணிக்கு, இத்திருத்தலப் பேராலயத்தில் நோயுற்றோரை முதலில் சந்திக்கிறார். அதன்பின், 10.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றும் திருப்பலி துவங்கும்.
மதியம் 1 மணிக்கு சர்தேனியாவில் உள்ள ஆயர்களுடன் மதிய உணவு அருந்தும் திருத்தந்தை, மீண்டும் திருத்தலப் பேராலயத்திற்குச் சென்று, அங்கு, காரித்தாஸ் பணிகளால் பயன்பெறும் வறியோரையும், சிறைக் கைதிகளையும் சந்திப்பார்.
மாலை 4 மணியளவில், பாப்பிறைக் கல்விக்கூடங்களில் பயிலும் இறையியல் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பயிற்சிப் பொறுப்பாளர்களையும் சந்தித்து உரையாற்றுவார்.
மாலை 5 மணிக்கு மீண்டும் ஒருமுறை Carlo Felice சதுக்கத்தில் இளையோரைச் சந்தித்து உரையாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 6.30 மணியளவில் மீண்டும் விமான நிலையத்திலிருந்து உரோம் நகருக்குத் திரும்புவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.