20 அருள்பணியாளர்கள் குருத்துவப் பணியின் 25 ஆண்டுகள் நிறைவுக்கு திருத்தந்தையின்
வாழ்த்து
செப்.18,2013. அருள் பணியாளர் நிலையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்யும் இத்தருணம், இப்பணியில்
இன்னும் ஆழமான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் உருவாக்கும் தருணமாக அமையட்டும் என்று
20 அருள்பணியாளர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். தென்கொரியாவின்
Seoul உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த 20 அருள்பணியாளர்கள் தங்கள் குருத்துவப் பணியின் 25
ஆண்டுகள் நிறைவை இத்திங்களன்று கொண்டாடியதையொட்டி அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியத்
திருத்தந்தை, வெள்ளிவிழா காணும் நாயகர்களையும், அவர்களின் குடும்பத்தினர் அனைவரையும்
வாழ்த்துவதாகக் கூறினார். திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ
பெர்தோனே அவர்கள், Seoul பேராயர் Andrew Yeom Soo Jung அவர்களுக்கு அனுப்பியுள்ள இந்த
வாழ்த்துத் தந்தியில், அன்னை மரியா, மற்றும் கொரிய மறைசாட்சிகளின் பரிந்துரைகளால் அருள்பணியாளர்களின்
அனைத்து பணிகளும் இன்னும் அதிகம் பலன் தரும் என்று திருத்தந்தை வாழ்த்தியுள்ளார்.