செப்.17,2013. நேர்மையற்ற நடுவரிடம் தன் வழக்கை எடுத்துச்சென்று இறுதியில் வெற்றியும்
அடைந்த விவிலியத்தின் கைம்பெண்ணைப்போல், திருஅவையும் தன் குழந்தைகளைக் காக்க மிகுந்த
தைரியத்துடன் செயல்படுகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும்
சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை
வழங்கிய திருத்தந்தை, வீரமங்கையான அன்னை திருஅவை தன் குழந்தைகளைப் பாதுகாக்கவேண்டும்
என்பதையும், அக்குழந்தைகளை, தன் துணையாம் கிறிஸ்துவிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதையும்
உணர்ந்தே உள்ளார் எனவும் எடுத்துரைத்தார். வரலாற்றில் நடைபோடும் நம் அன்னையாம் திருஅவை,
தன் குழந்தைகளுக்காக அழுவதையும், அவர்களுக்காக செபிக்க வேண்டியதையும் அறிந்துள்ளார் என்ற
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் குழந்தைகளுக்குப் பலமூட்டி அழைத்துச்செல்லும் இத்தாய்,
அவர்களை இறைவனை நோக்கி அழைத்துச்சென்று அவரின் கைகளில் ஒப்படைப்பதை தன் கடமையாகக்கொண்டுள்ளார்
என்றார். தன் துணையான இறைவனைத் தேடிச்செல்லும் தாயாக திருஅவையை உருவகப்படுத்திப் பேசிய
திருத்தந்தை, தாய் திருஅவைக்கு வெளியே ஒப்புரவு இடம்பெறுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.